தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் சஞ்சய் தத்
டெல்லி: டெல்லி தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டும். இதன் மூலம் நான் லோக்சபா தேர்தலி்ல போட்டியிட உதவ வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் தத் மனு தாக்கல் செய்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சி சார்பில் லக்னோ தொகுதியில் சஞ்சய் தத் போட்டியிடுவார் என ஏற்கனவே அமர்சிங் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு மும்பை கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனை இடையூறாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
சட்டப்படி ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவரால் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட இப்படி தடை விதிக்கும் சட்டம் இன்னொரு வாய்ப்பையும் வழங்குகிறது. அதாவது, தண்டனை மேல் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டால் தேர்தலி்ல் போட்டியிடலாம் என்பதே அது.
தற்போது தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சஞ்சய் தத் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். அது நிலுவையில் உள்ளது. இருப்பினும் இதுவரை அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்படவில்லை.
ஒரு வேளை சஞ்சய் தத் நிற்க முடியாவி்ட்டால் அவருடைய மனைவி மான்யதாவை நிறுத்துவோம் எனவும் அமர் சிங் கூறியுள்ளார்.
இந்த நிலையில்,உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் தத் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், நான் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், தடா சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படவில்லை. மாறாக, ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ்தான் தண்டனை விதிக்கப்பட்டேன்.
இது எனது முதல் குற்றம் ஆகும். இதற்கு முன்பு நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது குடும்பத்தினர் அரசியலில் சிறந்து விளங்கியவர்கள்.
நான் நாட்டுக்குச் சேவையாற்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.
முன்பு கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் வழக்கில், கொலைக் குற்றத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அவர் தேர்தலில் போட்டியிட சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது.
அதேபோல நானும் தேர்தலி்ல் போட்டியிட வழி ஏற்படுத்தும் வகையில் எனது தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவிருப்பதாக சஞ்சய் தத்தின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.