பசிபிக் கமாண்ட் என்றால் என்ன?
இந்தப் படையின் உதவியை இலங்கை ராணுவம் நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந் நிலையில் பசிபிக் கமாண்ட் குறித்து அறிவது அவசியம்.
1947ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் உருவாக்கிய படைதான் இந்த பசிபிக் கமாண்ட். உலகெங்கிலும் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பிரிவு இது.
உலக அளவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு, 60 சதவீத உலக மக்கள் தொகை, 30 நாடுகள், 20 பிராந்தியங்கள், அமெரிக்காவின் வசம் உள்ள பத்து பிராந்தியங்கள் இந்த பசிபிக் கமாண்ட் பிரிவின் கீழ் வருகின்றன.
இதன் தலைமையகம் ஹோனலூலுவில் உள்ளது. இந்திய பெருங்கடல், தெற்கு ஆசியா, ஆர்க்டிக் பிரதேசங்களில் இதன் படைப் பொறுப்பு வருகிறது. 1976ம் ஆண்டு ஆப்பிரிக்காவையும் தனது படைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது அமெரிக்கா. பின்னர் ரொனால்ட் ரீகன் அதிபரான பின்னர் சீனா, கொரியா, மங்கோலியா, மடகாஸ்கர் ஆகியவற்றையும் இப்பிரிவின் கீழ் கொண்டு வந்தார்.
இந்தப் படைப் பிரிவில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை, மெரைன் கார்ப்ஸ் உள்ளிட்ட படைகளைச் சேர்ந்த 3 லட்சம் வீரர்கள் உள்ளனர். இவர்களில் 20 சதவீதம் பேர் அமெரிக்க படைகளில் ரெகுலராக உள்ள வீரர்கள் ஆவர்.
இவர்களில் 1 லட்சம் பேர் எப்போதும் தாக்குதலுக்குத் தயார் நிலையில் இருப்பவர்கள். மற்றவர்கள் அந்தந்த பிராந்திய படைத் தளங்களில் இருப்பவர்கள்.
இந்தியா, சீனா, ரஷ்யா, வட கொரியா, தென் கொரியா ஆகிய நாடுகளின் ராணுவ செயல்பாடுகளையும் இந்த பசிபிக் கமாண்ட் பிரிவு கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படைப் பிரிவின் கமாண்டர், அமெரிக்க அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் நேரடியான தொடர்பை வைத்திருப்பார். எதுவாக இருந்தாலும் நேரடியாக இவர்களுடன் அவர் பேச முடியும்.
அமெரிக்காவின் இந்த பசிபிக் கமாண்ட் பிரிவின் உதவி தேவைப்படும் நாடுகள் இதை அணுகினால் அவர்களுக்கு தனது வீரர்களை அனுப்பி வைத்து உதவும் அமெரிக்கா.
இந்தப் படையின் உதவியைத்தான் தற்போது இலங்கை நாடியுள்ளது.