தலிபான்களால் கொல்லப்பட்ட சைமனின் உடல் கண்டுபிடிப்பு - கை துண்டிப்பு
கள்ளக்குறிச்சி: ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்பு தலிபான் தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சைமனின் உடலை ஆப்கன் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். சைமனின் உடலில் ஒரு கை இல்லை.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சைமன். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள, இத்தாலி நாட்டு பேக்கரி கடையில் வேலை பார்க்கச் சென்றார்.
இந்த நிலையில் ஆப்கனில் உள்ள இத்தாலி ராணுவ வீரர்களுக்கு பேக்கரி நிறுவனத்திலிருந்து உணவு கொண்டு செல்லப்பட்டது. அந்தக் குழுவில் சைமனும் இடம் பெற்றிருந்தார்.
அப்போது சைமனை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி்ச் சென்றனர். அவரை விடுவிக்க கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். மீட்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 8ம் தேதி சைமனை சுட்டுக் கொன்று விட்டதாக தீவிரவாதிகள் தெரிவித்தனர்.
இதனால் சைமனின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினர். இதை விட துயரமாக, கொல்லப்பட்ட சைமனின் உடலை ஒப்படைக்கவும் தலிபான் தீவிரவாதிகள் பணம் கேட்டதுதான்.
இந்த நிலையில் சைமனின் உடல் 23 நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலில் ஒரு கை இல்லை. மேலும் உடலில் 5 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன.
சைமன் உடல் மீட்கப்பட்டிருப்பது குறித்து காபூலில் தங்கியுள்ள அவரது சகோதரர் சுப்ரமணியம் தொலைபேசி மூலம் சொந்த ஊருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சைமனின் உடல் இன்று இரவு சென்னைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.