சத்யம்: 51% பங்குகளை விற்க செபி அனுமதி!
டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்கும் முடிவுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.
இப்போது இந்த பங்குகளை வாங்க சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பதாக சத்யம் கூறியுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸால் தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டாளர்களுக்கு சத்யத்தின் 31 சதவீத பங்குகள் கொடுக்கப்படும். அவர்கள் மேலும் 21 சதவீத பங்குகளை வெளிச் சந்தையில் வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே 31 சதவீத பங்குகளை என்ன விலைக்கு வாங்கினார்களோ அதே விலைக்கே இந்த 21 சதவீத பங்குகளும் கொடுக்கப்படும்.
ஒரு வேளை அவர்களால் வெளிச் சந்தையில் 21 சதவீத பங்குகளை வாங்க முடியவில்லை என்றால், அவர்களுக்கு தேவையான பங்குகளை (மொத்தம் 51 சதவீத பங்குகள் இருப்பதற்கு தேவையான) சத்யம் கம்ப்யூட்டர்ஸே கொடுக்கும்.
சத்யத்தின் 51 சதவீத பங்குகளை வாங்குபவர்கள் அந்த பங்குகளை வாங்கிய தேதியிலிருந்து மூன்று வருடங்களுக்கு வேறு யாருக்கும் அவற்றை விற்க முடியாது. நேற்றைய சந்தை நிலவரப்படி சத்யத்தின் பங்குகள் ரூ.35.10 விலையில் இருந்தன.
கடும் நிதி நெருக்கடி மற்றும் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தி என பல மைனஸ்கள் இருந்தாலும் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க எஸ்ஸார், எல் அண்டு டி, ஸ்பைஸ் மற்றும் ஐபிஎம் போன்ற இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.