பல திமுக எம்.பிக்களுக்கு மீண்டும் சீட் இல்லை?
சில முக்கியமான, மூத்த அமைச்சர்களைத் தவிர மற்ற எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதில்லை என கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் சில மத்திய அமைச்சர்களும் அடக்கம் எனத் தெரிகிறது.
பழைய தலைமுறையினரை படிப்படியாக கழற்றி விட்டு, விட்டு, இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாம்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு மீண்டும் மத்திய சென்னை தொகுதி கிடைக்கலாம். டி.ஆர்.பாலு தென் சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்குப் போகலாம்.
பெரம்பலூர் தனித் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக்கப்பட்டு விட்டது. எனவே அந்தத் தொகுதியின் எம்.பியான மத்திய அமைச்சர் ராசா, இந்த முறை வட சென்னை தொகுதிக்கு மாறக் கூடும் எனத் தெரிகிறது.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம், கரூர் எம்.பி. கே.சி.பழனிச்சாமி ஆகியோருக்கு மீண்டும் சீட் கிடைக்கும் எனத் தெரிகிறது.
வட சென்னை எம்.பியும், மூத்த தலைவருமான செ.குப்புசாமிக்கு உடல் நலனைக் காரணம் காட்டி இந்த முறை சீட் மறுக்கப்படும் எனத் தெரிகிறது.
அதேபோல மத்திய அமைச்சர் ரகுபதிக்கும் இந்த முறை சீட் கிடைக்காது எனத் தெரிகிறது.
சீட் மறுக்கப்படுவோர் பட்டியலில் சட்டத்துறை இணை அமைச்சர் வெங்கடபதியும் இருப்பதாக கூறுகிறார்கள்.
இதற்கிடையே திமுக வேட்பாளர்களுக்கான மனுக்கள் படு ஜோராக விற்பனையாகி வருகின்றன.
வரும் 15ம் தேதி வரை இந்த விண்ணப்ப மனுக்களை பூர்த்தி செய்து கட்சியிடம் வழங்கலாம். 25ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் வேட்பாளர்களுக்கான நேர்க்காணல் நடக்கிறது.