For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 கல்லூரி மாணவர்கள் கல்வீசி பயங்கர ரகளை - மக்கள் அவதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பஸ் தினம் கொண்டாடிய நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நேற்று பயங்கர ரகளை மூண்டது. இதனால் அந்தப் பகுதியி்ல் போக்குவரத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் சொல்லொணா அவதியை சந்தித்தனர்.

சென்னை நகரில் பஸ் தினம் என்ற பெயரில் மாணவர்கள் செய்து வரும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்து, சாலையில் போவோர், வருவோரை சீண்டியும் மாணவர்கள் செய்து வரும் இந்த பஸ் தின அட்டகாசம் மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது.

நேற்று நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் 41-டி மாநகர பஸ்சில் பஸ் தினம் கொண்டாடினார்கள். அமைந்தகரை அண்ணா நுழைவுவாயிலில் இருந்து பஸ்சில் மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். ஆட்டம் பாட்டத்தோடு நடனமாடியபடி வந்தனர்.

அந்த பஸ்சை பச்சையப்பன் கல்லூரி வழியாக போலீசார் அனுமதிக்கவில்லை. சூளைமேடு நெல்சன்மாணிக்கம் ரோடு வழியாக அந்த பஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஏற்கனவே நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கும், பச்சைப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் முன்விரோதம் இருந்ததால், மோதல் ஏற்படக்கூடும் என்று கருதி போலீசார் பஸ்சை திருப்பிவிட்டனர்.

இதை தெரிந்துகொண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 100 பேர் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே பாலத்தில் ஏறி நின்று கொண்டிருந்தனர்.

நந்தனம் கல்லூரி மாணவர்கள் வந்த பஸ் சூளைமேடு சுரங்கப்பாதை அருகே வந்தது. அப்போது பாலத்தின்மேல் நின்று கொண்டிருந்த மாணவர்கள் சரமாரியாக கற்களை வீசினார்கள். உடனடியாக நந்தனம் கல்லூரி மாணவர்கள் வந்த பஸ் நிறுத்தப்பட்டது. ரெயில் தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து சரமாரியாக வீசியபடி நின்றனர். கற்கள் அருகில் உள்ள கிழக்கு நமச்சிவாயபுரத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளிலும் விழுந்தன.

கல்வீச்சில் குதித்த மக்கள்

மாணவர்களின் இந்த அட்டகாசத்தைப் பார்த்து வெகுண்ட பொதுமகக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். கைக்குக் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடிவந்தனர்.

சாலையில் கிடந்த கற்களைப் பொறுக்கி மாணவர்கள் மீது சரமாரியாக வீசித் தாக்கினர். இப்படி மாறி, மாறி கற்களை வீசியதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. உடனடியாக அந்த பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

தகவல் கிடைத்தவுடன் போலீஸ் இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் கணேசமூர்த்தி, உதவி கமிஷனர்கள் முரளி, இளங்கோ மற்றும் போலீஸ் படையினர் நூற்றுக்கணக்கானோர் விரைந்து வந்தனர். கற்களை வீசிய மாணவர்களை விரட்டி அடித்தனர்.

பொதுமக்களையும் வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கி சூடு நடத்துவோம் என்று போலீசார் எச்சரித்தனர்.

இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். போலீசார் விரட்டியதும் மாணவர்களும் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அருகில் உள்ள லயோலா கல்லூரியிலும் பதற்றமாக காணப்பட்டது. அந்த கல்லூரி வாசல் இழுத்து மூடப்பட்டது.

மாணவர்களின் கல்வீச்சில் அமைந்தகரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. கார் ஒன்றும், ஆட்டோ ஒன்றும் தாக்கப்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவரும் மண்டை உடைந்து காயம் அடைந்தார். சூளைமேடு சுரங்கப்பாதை முழுவதும் கற்கள் சிதறிக் கிடந்தன.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த வன்முறை நீடித்தது. போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.

இச்சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் 40 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X