தங்கபாலு-பண்ருட்டி திடீர் ஆலோசனை: கூட்டணி?
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது குறித்து பேசி வருகிறோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இன்று காலை விருகம்பாக்கத்தில் தனது மைத்துனரும், தேமுதிக இளைஞர் அணி செயலாளருமான சுதீஷ் கட்டியுள்ள புதிய வீட்டை விஜயகாந்த் திறந்து வைத்தார்.
இந்த விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு திடீர் வருகை புரிந்தார். இத்தனைக்கும் விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டதாக தகவல் இல்லை.
தங்கபாலுவை சுதீஷும், அவரது வீட்டினரும், கட்சி நிர்வாகிகளும் உள்ளே அழைத்துச் சென்றனர்.
உள்ளே சென்ற தங்கபாலு, அங்கிருந்த தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது என்ன பேசப்பட்டது என்பதை இருவரும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
விஜயகாந்த் வருவதற்கு முன்பாக தங்கபாலு வந்து பண்ருட்டியாருடன் பேசி விட்டுச் சென்றுவிட்டார். தேர்தல் கூட்டணி தொடர்பாகவே தங்கபாலு பண்ருட்டியாருடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.