அழகிரியின் மேற்பார்வையில் 10 தொகுதிகள்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் மு.க. அழகிரி போட்டியிடக் கோரி அவரை அவரது ஆதரவாளர்கள் நெருக்கி வருகின்றனர்.
அவர் போட்டியிடாவிட்டால் அவரது மனைவி காந்தியை நிறுத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
மதுரையில் அழகிரி போட்டியிட வேண்டும் என்று கோரி அவரது பெயரில் திமுக வேட்பாளர்களுக்கான மனுக்களை வாங்கி பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதே போல வேறு பல தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அழகிரிக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால், தேர்தலில் போட்டியிடும் திட்டம் அழகிரியிடம் இல்லை என்றே தெரிகிறது. தனக்கு கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் திமுகவையும் கூட்டணிக் கட்சியான காங்கிரசையும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெறச் செய்யும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
கட்சியி்ன் தென் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் இப்போதே ஆலோசனைகளை ஆரம்பித்துவிட்ட அழகிரி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
தென் தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் திமுகவும் காங்கிரசும் அழகிரியின் மேற்பார்வையில் தேர்தல் சந்திக்கவுள்ளன.
இந்த 10 தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை அழகிரி கேட்டு வாங்கியுள்ளார். மேலும் தொகுதிகளின் நிலவரம் குறித்து கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் அழகிரி ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.
இந்தத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை இறுதி செய்வதிலும் அழகிரியின் பங்கு அதிகமாகவே இருக்கும் என்பதால் சீட் கேட்டு அவரை நச்சரிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.
மதுரையில் 3 இடைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணியை அமோக வெற்றி பெற செய்த அழகிரி அதே வியூகத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலுலும் பயன்படு்த்தவுள்ளார் என்கிறார்கள்.