ஐஐஎம் மாணவர்களிடம் ஆதரவு திரட்டும் பாஜக
டெல்லி: இந்திய பிசினஸ் கல்விக் கழகங்களில் (ஐஐஎம்) பாஜகவுக்கு ஆதரவு சேகரிக்க அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் ஐஐஎம் மாணவர்களின் வாக்குகளை திரட்ட அவர் முடிவு செய்துள்ளார்.
இது தேர்தல் காலம், முடிந்தவரை அத்தனை வாக்காளர்களையும் தங்கள் பக்கம் இழுக்க கட்சிகள் தீவிரமாக உள்ளன.
அந்த வகையில், ஐஐஎம் எனப்படும் இந்திய பிசினஸ் கல்விக் கழகங்களின் மாணவர்களின் ஆதரவைத் திரட்ட அத்வானி திட்டமிட்டுள்ளார். இதற்காக நாடு முழுவதும் உள்ள ஐஐஎம்களுக்கு அவர் செல்லவுள்ளார்.
ஐஐஎம் தவிர பிற பிசினஸ் கல்விக் கூடங்களுக்கும் அவர் போகப் போகிறார். பாஜகவுக்கு மாணவர்களின் ஆதரவை அவர் சேகரிக்கவுள்ளார்.
இன்னும் சில நாட்களில் அத்வானியின் இந்த ஐஐஎம் விசிட் தொடங்கவுள்ளது. இந்த பிரசாரத்திற்கு அத்வானி@காம்பஸ் என பாஜக பெயரிட்டுள்ளது. கட்சியின் இளைஞர் அணி இந்த பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பிரசாரத்தின் மூலம் இளைஞர்களை பெருமளவில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதே பாஜகவின் நோக்கமாகும். மேலும் இளைஞர்கள் மீதும், அவர்களது வேலை வாய்ப்பு குறித்தும், இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியின் மீதும் பாஜகவுக்கே உண்மையான அக்கறை உண்டு என்பதைக் காட்டும் வகையிலும் இந்தப் பிரசாரத்தை பாஜக திட்டமிட்டுள்ளது.