அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள வீட்டில் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மேற்கு கிளிவ்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை கண்டனர். அவர்களில் ஒரு குழந்தை மட்டுமே காயத்துடன் உயிர் தப்பியிருந்தது. மற்றவர்கள் பரிதாபமாக பலியாகி இருந்தனர்.
இதையடுத்து போலீசார் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் குற்றவாளியை தேடி வருகின்றனர். டேவன் கிராபோர்டு (33) என்பவனுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இது குறித்து கிளிவ்லேண்ட் போலீஸ் லெப்டினன்ட் தாமஸ் ஸ்டேசோ கூறுகையில், பலியான நான்கு குழந்தைகளில் சில கிராபோர்டின் குழந்தைகளாக இருக்கலாம். துப்பாக்கி சூடு நடப்பதற்கு சற்று முன்னர் அந்த வீட்டில் இருந்த குழந்தை பக்கத்து வீட்டுக்கு சென்று அவர்களிடம் காப்பாற்றுமாறு கூறியுள்ளது என்றார்.
இது தொடர்பாக சிகாகோவிலிருந்து வெளிவரும் கிளிவ்லேண்ட் பிளைன் டீலர் என்று பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பலியான பெண் அந்த குழந்தைகளின் தாய். தேடப்பட்டு வரும் குற்றவாளி கிராபோர்டு கடந்த 2002ல் குடும்ப வன்முறை சட்டத்தில் கைது செய்யப்பட்டவன். அப்போது குழந்தைகளை துப்பாக்கியால் மிரட்டியுள்ளான் என செய்தி வெளியிட்டுள்ளது.