காமன்வெல்த் விளையாட்டு விளம்பரம்: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் குட்டு
டெல்லி: டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டி தொடர்பாக செய்திதாள்களில் முழுபக்க விளம்பரம் செய்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விளம்பரத்துக்கான பணத்தை அந்த விளம்பரத்தை கொடுத்தவர்களின் சொந்த பணத்தில் இருந்து கொடு்க்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு அக்டோபரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தலைநகர் டெல்லியில் நடக்கவிருக்கிறது. இதற்கான பணிகளை மத்திய அரசு விரைவாக செய்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லி அரசு அனைத்து பத்திரிகைகளிலும் காமன்வெல்த் விளையாட்டு தொடர்பாக முழுபக்க அளவில் விளம்பரங்களை வெளியிட்டது. அதில் பாலங்கள் கட்டியது போன்ற அரசின் சாதனைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இது போன்ற சாதனை விளம்பரங்கள் செய்வது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது என்பதால் தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை செயலர் மற்றும் டெல்லி மாநில அரசின் தலைமை செயலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில்,
இந்த விளம்பரங்களில் டெல்லியி்ல் 24 மேம்பாலம் கட்டியது, 75 ஏரோபிரிட்ஜ் கொண்ட விமான நிலையம் அமைத்தது, 1285 கிமீ., நீளத்துக்கு சாலை வசதிகளை மேம்படுத்தியது, 5 ஆயிரம் தாழ்தள பேருந்துகளை இயக்கியது போன்ற மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசின் சாதனைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
பொது மக்கள் பணத்தில் இது போன்ற விளம்பரங்களை வெளியிட்டதன் மூலம் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்களுக்கு ஆன செலவுத்தொகையை, அதை பத்திரிகையில் வெளியிட அனுமதி அளித்த அதிகாரிகள் அல்லது அதற்கு பொறுப்பானவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் என்றார்.