குழந்தையை காக்க சென்னையில் அவசரமாக தரையிறங்கிய அபுதாபி விமானம்
சென்னை: அபுதாபியில் இருந்து ஜகார்த்தா சென்று கொண்டிருந்த விமானம், அதில் பயணம் செய்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அபுதாபியில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு நேற்று காலை எதியார்டு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 320 பயணிகளுடன் கிளம்பியது.
விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்த இந்தோனேசியாவை சேர்ந்து நூருல்லா என்ற பெண்ணின் 8 மாத குழந்தை ஒன்றுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுபோக்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து வாந்தியும் ஏற்பட அக்குழந்தையின் தாயார் அழ ஆரம்பித்தார்.
உடனடியாக இதை கவனித்த விமான சிப்பந்திகள் குழந்தையை காப்பாற்றும் பொருட்டு அருகிலிருந்த சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டனர். உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து விமானம் காலை 9.10 மணிக்கு தரையிறங்கியது.
அக்குழந்தை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. விமானத்தில் வந்த பயணிகளுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டு அவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சர்வதேச விமான விதிகளின் படி விமானம் ஒரு முறை அவசரமாக தரையிறக்கப்பட்டால், அதன்பின்னர் 10 மணி நேரம் கழித்து தான் புறப்படும். இதனால் அந்த விமானம் நேற்று இரவு 8.30 மணிக்கு இந்தோனேசியா நோக்கி கிளம்பியது.