வருமுன் காப்போம் திட்டத்துக்கு இடைக்கால தடை - நரேஷ் குப்தா
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வருமுன் காப்போம் எனப்படும் ஏழைகளுக்கான இலவச மருத்துவ திட்டத்தை தேர்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஏழை எளியவர்கள் பயன்படும் வகையில் வரும்முன் காப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், ஞாயிறு தினங்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இத்திட்டம் மூலம் ஏழை மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடைமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்நிலையில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதா? வேண்டாமா? என்ற சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்கள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை கேட்டுள்ள தமிழக தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா அவர்களிடம் இருந்து உத்தரவு வரும்வரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வருமுன் காப்போம் திட்டம்தொடர்ந்து நடத்துவது தொடர்பாக சிவகாசி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர், தலைமை தேர்தல் அதிகாரியிடம் கருத்து கேட்டிருந்தார். அதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு தவறுதலாக தகவல் அனுப்பப்பட்டுவிட்டது.
இந்த விஷயம் தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். தேர்தல் கமிஷனின் உத்தரவு வரும்வரை வருமுன் காப்போம் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்.
இதுதொடர்பாக பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.