உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் மாலா கேட்டுக் கொண்டதன் பேரில் உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19ம் தேதி வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக மாறியது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்ட நிகழ்ச்சி நாட்டையே உலுக்கி விட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்துக்குள் போலீஸார் வர உயர்நீதிமன்றம் தடை விதித்தது. கோர்ட்டுக்கு வெளியிலிருந்தபடி அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஹேமந்த் லட்சுமண் கோகலே நாளை பதவியேற்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றப் பதிவாளர் மாலா, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், மோதல் சம்பவத்திற்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்ததைப் போன்ற போலீஸ் பாதுகாப்பை மீண்டும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை ஏற்று உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் மீண்டும் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் நான்கு முக்கிய வாசல்களிலும் போலீஸார் நிறுத்தப்படுவர்.
மேலும், உயர்நீதிமன்றத்திற்குள் இதுவரை இயங்கி வந்த காவல் நிலையம் வெளியே போகிறது. தீவைத்து எரிக்கப்பட்டு விட்டதால் இந்தக் காவல் நிலையம் தற்காலிகமாக எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. விரைவில் தனி இடம் பார்த்து அங்கு உயர்நீதிமன்றக் காவல் நிலையம் இடம் பெயரவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.