பெங்களூரில் போதை 'ஆட்டம்'-29 பெண்கள் உட்பட 110 பேர் கைது
பெங்களூர்: பெங்களூர் அருகை பண்ணை வீட்டில் போதை மருந்து ஏற்றி கொண்டு குத்தாட்டம் போட்ட, 110 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 29 பெண்களும் அடங்குவர்.
பெங்களூர் நகருக்கு அருகில் இருக்கும் பண்ணை வீடுகளில் ஒளி வெள்ளத்தில், காதுகளை கிழிக்கும் அளவுக்கு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கர்களை அலறவிட்டு குத்தாட்டம் போடும் 'ரேவ் பார்ட்டிகள்' அதிகரித்து வருகின்றன. இங்கு வருபவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவது தெரிய வந்ததை அடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பெங்களூரில் இருந்து 25 கிமீ., தூரத்தில் உள்ள ராமநகரா மாவட்டத்தில் இருக்கும் சுஞ்சனகுப்பே என்ற கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டி நடக்கவிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதை உறுதி செய்தனர். பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். போலீஸ் படை குவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பண்ணை வீட்டுக்குள் அதிகாலை 4.30க்கு நுழைந்த போலீசார் அஙகு குத்தாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த 29 பெண்கள் உட்பட 110 பேரை கைது செய்தனர். அவர்களில் 4 பெண்கள் உட்பட 39 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 4 பெண்களும் ஈரான், தான்சானியா மற்றும் பூட்டானை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களில் பலர் போதை மருந்து பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்திருந்த முகமது ஆடம் (21) மற்றும் நிதின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பண்ணை வீட்டில் இருந்த லட்சணக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர்.
போதை ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான மது, ஆபாச சிடி போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், பல நாட்டை சேர்ந்தவர்களும் இந்த பார்ட்டில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இன்டர்நெட் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் மகடி அரசு மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆடம் என்பவன் நுழைவு கட்டணமாக ரூ 1500 வசூல் செய்துள்ளான். அவனை தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.