காங்கிரஸ் அல்லாத பிரதமருக்கு ஆதரவு- ஏ.பி.பரதன்
டெல்லி: மத்தியில் மீண்டும் மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தால், அதில் காங்கிரஸ் கூட்டணி கட்சி என்ற வகையில் மட்டும் இடம் பெற்றால், அந்த அரசை இடதுசாரிக் கட்சிகள் கவிழ்க்காது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் தெரிவித்துள்ளார்.
சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வோகேட் நிகழ்ச்சியில் பேசிய பரதன் இவ்வாறு கூறினார்.
மத்தியில் மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், அதற்கு தலைமையேற்காமல், ஆட்சியில் மட்டும் காங்கிரஸ் பங்கேற்றால், இடதுசாரிகளான நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கரன் தாப்பர் கேட்டதற்கு இவ்வாறு பதிலளித்தார் பரதன்.
இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் சில வாரங்களுக்கு முன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பரதன் மேலும் கூறியதாவது:
மத்தியில் பாஜக, காங்கிரஸ் இடம் பெறாத புதிய கூட்டணியே ஆட்சியில் அமரும் என்று நம்புகிறோம். இப்போது காங்கிரஸ், பாஜக இருவரையுமே நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்களது முதல் எதிரி பாஜக தான். வகுப்புவாதமும், மதவாதமும், பிரிவினைவாதமுமே பாஜகவின் பிரதான செயல் திட்டமாக உள்ளது.
வரும் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. மூன்றாவது அணியே ஆட்சிக்கு வரலாம். இந்தக் கூட்டணி தேர்தல் முடிந்த பிறகும் உருவாகலாம். 4 இடதுசாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம், அதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இந்தக் கூட்டணியில் இடம்பெறும். மேலும் பகுஜன் சமாஜ், சரத்பவாரின் கட்சிகளும் கூட்டணிக்கு வரலாம்.
ஒருவேளை காங்கிரஸ் தலைமையில் அல்லாமல் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அதை இடதுசாரிகள் கவிழ்க்க மாட்டார்கள். காங்கிரஸ் பிரதமர் அல்லாத ஆட்சியை தொடர விட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்.
கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மறைமுக அழைப்பு விடுத்து காங்கிரஸ், திமுக இரண்டுக்குமே கலக்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்றார் பரதன்