பாமக மகளிர் உண்ணாவிரதம் திடீர் ஒத்திவைப்பு
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பாமக மகளிர் சங்கம் சார்பில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
இந்தப் போராட்டம் நாளை நடைபெறுவதைத் தொடர்ந்து தான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஒரு நாள் முன் கூட்டியே இன்று நடத்த முடிவு செய்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் நாளை (10-ந் தேதி) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
எனவே உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ் நாடு முழுவதும் இருந்து கலந்து கொள்ள இருக்கும் பாட்டாளி மகளிர் சங்கத்தை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதை இதையே அறிவிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மணி நேற்று விடுத்திருந்த அறிக்கையில்,
இலங்கையில் சிங்கள ராஜபக்சே அரசு தமிழர்களை முப்படைகளை கொண்டும், கொத்துக் குண்டுகளைக் கொண்டும் அழித்து வருகின்றது. இலங்கை அரசு பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் இலங்கை ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டு அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து வருகிறது.
ராஜபக்சேவின் இந்த கொடூரமான செயலை கண்டித்தும், உடனடியாக போர்நிறுத்தம் செய்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி பாட்டாளி மகளிர் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
மகளிர் சங்க தலைவி நிர்மலா ராசா தலைமை தாங்குகிறார். சக்தி கமலாம்பாள் எம்.எல்.ஏ., காசாம்பு பூமாலை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சிலம்புச் செல்வி உள்பட பலர் முன்னிலை வகிக்கிறார்கள்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்கிறார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கை பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பாட்டாளி மகளிர் சங்கத்தினர், பெண்கள் அமைப்பினர் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
பாமகவின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.