வங்கக் கடலில் திடீர் புயல் சின்னம்-தென் மாவட்டங்களில் கன மழை
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவு நேரங்களில் பனி கொட்டுகிறது. இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் வானிலை அப்படியே தலைகீழாக மாறியது.
காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
நாகை, சீர்காழி, தஞ்சை, திருவாரூர், மன்னார் குடி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
அதேபோல ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது.
சென்னையில் காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. ஆங்காங்கு தூறல் மழை காணப்படுகிறது.
இந்த நிலை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் எனவும், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் கொந்தளிப்பு-பாம்பனில் மீனவர் பலி:
இதற்கிடையே, ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கொந்தளிப்புடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பு காரணமாக பல படகுகள் ஒன்றுக்கொன்று மோதி சேதமடந்துள்ளன.
பாம்பன் பகுதியில் ஒரு மீனவர் கடல் கொந்தளிப்பில் சிக்கி பலியானார்.