அலுவலகம் விற்று கடன் அடைக்கும் நியூயார்க் டைம்ஸ்!
நியூயார்க்: உலகப் புகழ் பெற்ற பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், மன்ஹாட்டனில் அமைந்துள்ள தனது தலைமை அலுவலகத்தின் பெரும்பான்மை பகுதியை 225 மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டது.
ஆனால் கட்டடத்தை இப்போது விற்பனை செய்தாலும், தொடர்ந்து அதே கட்டடத்தில் வாடகைக்கு இருக்கப் போகிறது இந்த நிறுவனம்.
இது விற்பனை மற்றும் மறு வாங்கல் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு ஒப்பந்தம். புதுவித கடன் வாங்கல் என்றுகூடச் சொல்லலாம். இதன்படி, முதல் 10 ஆண்டுகளுக்கு இதே கட்டடத்தில் நியூயார்க் டைம்ஸ் செயல்படும். அதற்கு ஆண்டுக்கு 24 மில்லியன் டாலர் வாடகையாகத் தரப்படும். 10 ஆண்டுகள் கழந்ததும், இதே கட்டத்தை நியூயார்க் டைம்ஸ் வாங்கிக் கொள்ளலாம், விரும்பினால்.
அப்போது ரூ.250 மில்லியன் மதிப்புள்ள கடன் பத்திரங்களைக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளலாம். இந்தப் பத்திரங்களுக்கான தொகை 1 ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம்.
இதில் என்ன பெரிய லாபம் வந்துவிடப் போகிறது...
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு வெளியில் ஏராளமான கடன் உள்ளது. இந்த நீண்ட காலக் கடன்களை அடுத்த ஆண்டுக்குள் அடைத்தாக வேண்டும். ஆனால் பொருளாதாரம் சரிந்து கிடக்கும் இந்த மோசமான சூழலில் பணத்தை எளிதில் புரட்ட அந்நிறுவனத்துக்குத் தெரிந்த சுலப வழி இதுதானாம்.
இப்போது கடன் தொல்லையின்றி நிம்மதியாக தொழிலைக் கவனிக்க முடியும் அல்லவா...!