எஸ்டிடி, உள்ளூர் அழைப்புக் கட்டணங்கள் மேலும் குறையும்!
அதன்படி அனைத்து விதமான அழைப்புகளுக்கும் தொலைபேசி சேவை அளிக்கும் நிறுவனம் செலுத்த வேண்டிய டெர்மினேஷன் கட்டணத்தைக் குறைத்துள்ளது ட்ராய். இதனால் இனி லேண்ட்லைன், செல்போன் மற்றும் வில்போன் உள்ளிட்ட அனைத்து வகை போன்களுக்கும் எஸ்டிடி உள்ளிட்ட உள்நாட்டு அழைப்புக் கட்டணங்கள் கணிசமாகக் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அது என்ன டெர்மினேஷன் கால்?:
குறிப்பிட்ட ஒரு நிறுவன மொபைலிலிருந்தோ அல்லது லேண்ட்லைனிலிருந்து வேறு ஒரு நிறுவன மொபைலுக்கு ஒரு கால் செய்தால், அதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணத்தை செலுத்த வேண்டும். இதை உங்கள் சார்பாக செலுத்துபவர் உங்களுக்கு இணைப்பு தரும் தொலைபேசி நிறுவனம்தான். ஒரு அழைப்புக்கான கட்டணத்தில் 30 சதவிகிதம் டெர்மினேஷன் கட்டணம்தான். இது ஒருவித மறைமுகக் கட்டணம். நுகர்வோருக்குத் தெரியாத ஒன்றும் கூட.
இந்தக் கட்டணத்தைத்தான் ட்ராய் குறைத்துள்ளது.
ட்ராய் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டதால் உடனே அனைத்து செல்போன்/லேண்ட் லைன் ஆபரேட்டர்களும் கட்டணத்தைக் குறைத்துவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அது சட்டப்பூர்வமானதும் அல்ல.
'சட்டப்படி கட்டாயமில்லைதான். ஆனால் நியாயப்படி பார்த்தால் இந்த டெர்மினேஷன் கட்டணக் குறைப்பையொட்டி அனைத்து நிறுவனங்களுமே உடனடியாக செல்போன், லேண்ட்லைன் மற்றும் வில்போன் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் பலவீனமான இன்றைய பொருளாதாரச் சூழலில் வாடிக்கையாளரை உற்சாகத்துடன் தக்க வைத்துக் கொள்ள முடியும்' என ட்ராய் அறிவித்துள்ளது.
இந்த டெர்மினேஷன் கட்டணக் குறைப்பு, தொலைபேசித் துறையில் கால்பதித்துள்ள புதிய நிறுவனங்களுக்கு மிகவும் உற்சாகம் தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக ஜிஎஸ்எம் செல்போன் சேவை வழங்கும் நிறுவனக்களுக்கு இது மிகவும் பயன்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும் அவர்களுக்கு இந்த கட்டணக் குறைப்பு உதவும்.
பொருளாதார நிலை மோசமடைந்து வரும் இந்த கால கட்டத்திலும் கூட, தொலைபேசித் துறை மட்டுமே தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட 15 சதவிகித கூடுதல் வாடிக்கையருடன் வளர்ச்சியைப் பெற்றுள்ளது தொலைபேசித் துறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.