நவீன் பட்நாயக் இந்துக்களின் எதிரி-விஎச்பி
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் இந்துகளுக்கு எதிரானவர் என விஸ்வ இந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.
ஒரிஸ்ஸாவில் பாஜக-நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கூட்டணி சமீபத்தில் பட்டென உடைந்தது. இதையடுத்து இடதுசாரிகளுடன் அவர் கைகோர்த்துள்ளார்.
இந் நிலையில் விஎச்பி அவரை தாக்கியுள்ளது. அதன் தலைவர் அசோக் சிங்கால் கூறுகையில்,
நவீன் பட்நாயக் இந்துக்களுக்கு எதிரான கொள்கையை உடையவர். இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக மாநிலம் தழுவிய பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளேன்.
சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதியை கொலை செய்தது யார் என்பது மாநில அரசுக்கு தெரியும். இந்த கொலையின் பின்னணியில் யாரெல்லாம் உள்ளார்கள் என்பதையும் மாநில அரசு நன்கு அறியும்.
எனினும், குற்றவாளிகளுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலை நடந்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் இதுவரை ஒரு குற்றவாளியைக்கூட மாநில அரசு கைது செய்யவில்லை என்றார் சிங்கால்.
மதமாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்தி்ல் சேர்த்து வந்த லக்ஷ்மணானந்தாவை நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து ஒரிஸ்ஸாவில் கிருஸ்துவர்கள் மீது ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் ஆகியவை கொலை வெறித் தாக்குதல் நடத்தின. கன்னியஸ்திரி ஒருவரும் கற்பழிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.