தமிழகத்தில் மேலும் 2 நாள் மழை நீடிக்கும்
தமிழகத்தை கோடை வாட்டி வரும் நிலையி்ல் இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் வானம் மேகமூட்டமாகக் காணப்படுவதோடு பலத்த சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.
மேலும் பல பகுதிகளில் கன மழையும் பெய்கிறது. இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சட்டென குறைந்துவிட்டது.
தூத்துக்குடியில் மணிக்கு சுமார் 70 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றினால் நகர் முழுவதும் தூசி மண்டலமாக மாறியது. மணலும் தூசியும் பறந்தாதல் வாகன ஓட்டுகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். மேலும் மழையும் பெய்தது.
கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் பலத்த காற்றினால் கரைப் பகுதிக்கு தள்ளப்பட்டன. சில படகுகள் சூறாவளியில் சிக்கி கவிழ்ந்தன.
அதே போல நெல்லை மாவட்டத்திலும் பலத்த சூறைக் காற்று வீசியது. இதில் சேரன்மாதேவி, பத்தமடை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சரிந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் வள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதே போல நாகை மாவட்டத்திலும், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி, திருத்துரைப்பூண்டி ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், பயறு சாகுபடி தொடர்ந்து மழையினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் மேலும் இரு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரு நாட்களுக்குப் பின் மீண்டும் கடும் வெயில் அடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.