ஹிலாரி-மேனன் சந்திப்பு-இலங்கை குறித்து பேச்சு
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார்.
அப்போது பாகிஸ்தான், தீவிரவாதம், தலிபான்களின் பரவல், இலங்கை பிரச்சனை ஆகிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.
நான்கு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார் மேனன்.
அதிபர் ஒபாமா அரசு பதவியேற்ற பின் இந்திய மூத்த அதிகாரி ஒருவரை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒபாமாவை சந்திக்கும் மன்மோகன்:
இதற்கிடையே வரும் ஏப்ரல் 2ம் தேதி லண்டனில் நடக்கும் ஜி-20 நாடுகள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் பங்கேற்கவுள்ளார். அப்போது அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்துப் பேசுவார்.
இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள மன்மோகன் முதலில் இக் கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், இதில் பிரதமர் பங்கேற்பது நிச்சயம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.