தேசியவாத காங். தலைமையிலான மேகாலயா அரசு பெரும்பான்மை இழந்தது
ஷில்லாங்: தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மேகாலயா அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது.
மேகலாயாவில் தேசியவாத காங்கிரஸ் தலைமையில் மேகாலயா முற்போக்குக் கூட்டணி அரசு பதவியில் உள்ளது.
இந்த நிலையில், தேசிய விழிப்புணர்வு இயக்கக் கட்சியின் தலைவரும், இக்கட்சியின் ஒரே எம்.எல்.ஏவும், அமைச்சருமான பால் லிங்டோ திடீரென தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
சமீபத்தில்தான் இரு சுயேச்சைகள் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் மேகாலயா அரசு சிக்கலில் ஆழ்ந்தது. இந்த நிலையில் பால் விலகிக் கொண்டதால் அந்த அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது.
காங்கிரஸுடன் கூட்டணி வைக்க பி.ஏ.சங்மா உள்ளிட்ட சில தலைவர்கள் முயற்சிப்பதால் தான் விலகி விட்டதாக பால் லிங்டோ கூறியுள்ளார்.
மேகாலயாவில் மொத்தம் 60 எம்.எல்.ஏக்கள். தற்போது ஆளுங்கூட்டணியில் 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும் சிலரும் விலகக் கூடும் எனத் தெரிகிறது.