புலிகள் அதிரடி: ராணுவ பீரங்கித் தளம் அழிப்பு-50 வீரர்கள் பலி
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையான கரும்புலிகள் பிரிவும் சேர்ந்து இந்த தாக்குதலில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் வசம் இருந்து வந்த விஸ்வமடு பகுதியை ஏற்கனவே ராணுவம் தனது வசம் வைத்துள்ளது.
ஆனால் தற்போது விஸ்வமடுவில் நடந்துள்ள சண்டையைப் பார்க்கும்போது அங்கு புலிகள் ஊடுறுவியிருப்பது தெரிய வருகிறது.
விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆர்ட்டில்லரி பீரங்கித் தளத்தை திங்கட்கிழமை இரவு விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கர்னல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கினர்.
இந்த கடும் தாக்குதலில் அந்த பீரங்கித் தளம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. மேலும் அங்கிருந்த ஆறு பீரங்கிகளையும் புலிகள் கைப்பற்றினர்.
அத்தோடு நில்லாமல் அந்த பீரங்கிகளைப் பயன்படுத்தி, ராணுவத்தினரையும் அதிரடியாக தாக்கினர். விடிய விடிய நடந்த இந்த தாக்குதலில் 50 ராணுவ வீரர்கள், ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டனர்.
ஏராளமான ராணுவ வீரர்கள் காயத்துடன் தப்பி ஓடி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
கிளிநொச்சி பீரங்கி தளம் கைப்பற்றப்பட்டது:
இதற்கிடையே கிளிநொச்சியில் ராணுவத்தின் வசம் உள்ள பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரம் வரைக்கும் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து கொழும்பைச் சேர்ந்த இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், அங்குள்ள ராணுவ பீரங்கித் தளத்தையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது.. இலங்கை படையினர் இந்த வாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். படையினரின் 58 ஆவது டிவிசன் படையணியின் முன்னணி நிலைகளை தகர்த்தவாறு விடுதலைப் புலிகளின் 600 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் இந்த பெருமளவிலான ஊடுறுவல் காரணமாக ஏ-9 பாதை வழியாக படையினர் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவது டிவிசன் படையணி உள்ளது.
படையினரின் பிரதேசத்திற்குள் 12 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவிய விடுதலைப் புலிகளின் அணிகள் கிளிநொச்சிக்கு அருகில் இருந்த பீரங்கி தளத்தை கைப்பற்றியுள்ளனர்.
அங்கிருந்த 130 மி.மீ பீரங்கிகள் மூன்றை கைப்பற்றி அதனைக் கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் நடைபெற்ற மோதல்களில் 200 படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னாலிருந்து சுற்றி வளைக்கும் புலிகள்:
இதற்கிடையே ராணுவத்தின் முழு கவனமும் தற்போது புதுக் குடியிருப்பு நகரில்தான் உள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் பின்னாலிருந்து ராணுவத்தை சுற்றி வளைத்து வருவதாக கூறப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக பிடிக்க ராணுவத்தின் அனைத்துப் பிரிவினரும் அந்தப் பகுதியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால் ஏற்கனவே இழந்த பல பகுதிகளில் தற்போது புலிகள் ஊடுறு வருவதாக கூறப்படுகிறது. விஸ்வமடு, கிலாலி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் ஊடுறுவி வருகின்றனர்.
மொத்தமாக ஊடுறுவிய பின்னர் ராணுவத்தினரை பின்னாலிருந்து சுற்றி வளைத்து தாக்கும் திட்டத்தில் புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது.