மதிமுகவிலிருந்து கண்ணப்பன் விலகல்-எம்எல்ஏ பதவி ராஜினாமா
கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்திருப்பதாக கூறியுள்ள அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகி விட்டார். அவர் திமுகவில் இணைகிறார்.
சில காலமாக வைகோ- கண்ணப்பன் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. கண்ணப்பன் திமுகவுக்குத் திரும்புவார் என்று பல முறை செய்திகள் வந்தாலும் அதை மறுத்தே வந்தார் கண்ணப்பன்.
இந் நிலையில் மருத்துவமனையில் இருந்த முதல்வர் கருணாநிதியை கண்ணப்பன் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கு வைகோவிடம் அவர் அனுமதி பெறவில்லை.
இதையடுத்து கண்ணப்பனை வைகோ கேள்வி கேட்டதாகவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே மதிமுக தேர்தல் குழுவில் கண்ணப்பனின் பெயர் இடம் பெறவில்லை. அதேபோல் சென்னையில் நடந்த மதிமுக அரசியல் ஆய்வுக் குழு கூட்டத்துக்கும் அவருக்கு வைகோ அழைப்பு அனுப்பவில்லை.
இந் நிலையில் இன்று பொள்ளாச்சி ஆலாம்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் கண்ணப்பன்.
பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் வெளியிட்டார். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார் கண்ணப்பன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகவும் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
போட்டி மதிமுக நடத்தி வரும் தலைவர்களான செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசனுடன் ஆகியோர் வரும் 17ம் தேதி திமுகவில் இணைகின்றனர். அவர்களுடன் இணைந்து கண்ணப்பன் திமுகவுக்குத் திரும்பலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், கண்ணப்பன் முன்னதாகவே திமுகவில் இணைகிறார்.
கண்ணப்பனை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் சில மூத்த மதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை என்பதையே கண்ணப்பனின் விலகல் முடிவு நிரூபிப்பதாக உள்ளது.