நீதிமன்ற மோதல்-போலீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ எப்.ஐ.ஆர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிப்ரவரி 19ம் தேதி பயங்கர மோதல் மூண்டது. வக்கீல்களும், போலீஸாரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தயார் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், வக்கீல்களைத் தாக்கியதாக பெயர் தெரியாத போலீஸ் அதிகாரிகள் என்று கூறி சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
உயர்நீதிமன்ற மோதலுக்குப் பின்னர் போலீஸ் அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
உயர்நீதிமன்ற மோதல் தொடர்பாக அடையாளம் தெரியாத வக்கீல்கள் என்று கூறி போலீஸ் தரப்பில் சட்ட விரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் போலீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.