For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் சந்தித்தார் - திமுகவில் இணைந்தார் கண்ணப்பன்

By Sridhar L
Google Oneindia Tamil News

Kannappan
பொள்ளாச்சி: மதிமுக சட்டசபைக் கட்சித் தலைவர் பொறுப்பு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்ட மு.கண்ணப்பனை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பொள்ளாச்சி சென்று சந்தித்தார். அவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கண்ணப்பன்.

சில காலமாக வைகோ- கண்ணப்பன் இடையே பனிப்போர் நடந்து வந்தது. கண்ணப்பன் திமுகவுக்குத் திரும்புவார் என்று பல முறை செய்திகள் வந்தாலும் அதை மறுத்தே வந்தார் கண்ணப்பன்.

இந் நிலையில் மருத்துவமனையில் இருந்த முதல்வர் கருணாநிதியை கண்ணப்பன் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கு வைகோவிடம் அவர் அனுமதி பெறவில்லை.

இதையடுத்து கண்ணப்பனை வைகோ கேள்வி கேட்டதாகவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே மதிமுக தேர்தல் குழுவில் கண்ணப்பனின் பெயர் இடம் பெறவில்லை. அதேபோல் சென்னையில் நடந்த மதிமுக அரசியல் ஆய்வுக் குழு கூட்டத்துக்கும் அவருக்கு வைகோ அழைப்பு அனுப்பவில்லை.

இந் நிலையில் நேற்று பொள்ளாச்சி ஆலாம்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் கண்ணப்பன்.

பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் வெளியிட்டார். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார் கண்ணப்பன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகவும் கண்ணப்பன் அறிவித்தார்.

கூடியிருந்த செய்தியாளர்களிடையே கண்ணப்பன் பேசுகையில்,

1993-ம் ஆண்டு வைகோவை மையம் கொண்டு எழுந்திட்ட உட்கட்சி பிரச்சினையால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி இந்த நேரம் வரை பல சோதனைகளும், தோல்விகளும் ஏற்பட்ட நேரத்தில் இயக்கத்திற்கு உண்மையானவனாகவும், நம்பிக்கையானவனாகவும் இருந்து வந்திருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

மனித நேயத்தோடு முதல்-அமைச்சரை சந்தித்த என்னை நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்து தனிமைப்படுத்தி அ.தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்கு முதல்-அமைச்சரின் சதிக்கு நான் இரையாகி விட்டதாக பழியும் சுமத்தியிருப்பது எனது வெளிப்படையான, தூய்மையான அரசியல் வாழ்வில் தீராத களங்கத்தை உருவாக்கி இயக்கத்தில் இருந்து வெளியேற்ற திட்டமிடுவதை உணர்கிறேன்.

எனவே பொது செயலாளர் வைகோ நம்பிக்கையின்மைக்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ள சூழ்நிலையில் ம.தி.மு.க.வின் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நான் விலகிக்கொள்கிறேன்.

தாங்க முடியாத மனச் சுமையுடனும், வேதனையுடனும் உங்களிடமிருந்து கண்ணீருடன் விடை பெறுகிறேன் என்றார் கண்ணப்பன்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். திமுகவில் இண ைவது குறித்து யோசித்து முடிவெடுப்பேன் என்றார்.

மதிமுகவிலிருந்து வேறு யாரேனும் விலகுகிறார்களா என்ற கேள்விக்கு, அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. இங்கு பல தோழர்கள் வந்திருக்கிறார்கள். பல பேருக்கு இதுகுறித்து தகவல் போகவில்லை. இதுகுறித்தும், மேலும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இனிமேல் முடிவு செய்யப்படும் என்றார்.

முதல்வர் கருணாநிதி தன்னுடன் இதுவரை பேசவில்லை என்று தெரிவித்த கண்ணப்பன், நாளைய (இன்று) தினம் முறைப்படி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதமும், அதே போல கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதமும் முறையாக தலைமை கழகத்துக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கிறேன் என்றார்.

அரசியலிலிருந்து தான் ஓய்வு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார் கண்ணப்பன்.

ஸ்டாலின் விரைந்தார்

இந்த நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலாம்பாளையம் விரைந்து வந்தார்.

கண்ணப்பனை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் ஸ்டாலின் கூறுகையில், முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி இங்கு வந்துள்ளேன். கண்ணப்பனை திமுகவில் சேருமாறு கூறுமாறு முதல்வர் உத்தரவிட்டார். அதை அவரிடம் தெரிவித்தார். கண்ணப்பனும் ஏற்றுக் கொண்டார் என்றார்.

பின்னர் கண்ணப்பன் கூறுகையில், விரைவில் முதல்வரை நேரில் சென்று சந்திப்பேன் என்றார்.

நேற்றே ஸ்டாலின் முன்னிலையில் கண்ணப்பன் திமுகவில் இணைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X