தேர்தல் பணி-அரசு ஊழியர்களுக்கு விடுப்பு ரத்து
சென்னை: தேர்தல் பணிகளையொட்டி சென்னை மாநகராட்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுலகவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை என மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன.
இவற்றுக்கான தேர்தல் பணிகளில் ஈடுபட சென்னை மாநகராட்சி, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 22 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி உதவி அலுவலர்கள், தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு அலுவலர்கள், தணிக்கை பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பணி களில் இவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அலுவலர்களை தேர்வு செய்து பெயர் பட்டியலை தயாரித்து வழங்குமாறு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தேர்தல் முடியும் வரை அரசு ஊழியர்கள் யாரும் விடுப்பில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்தல் பணிக்கு வர இயலாத ஊழியர்கள் தங்களது துணை தலைமை அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தெற்கு ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 4 கட்டமாக சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கான அடையாள அட்டைகள், விளக்க கையேடுகளும் விரைவில் தயாரிக்கப்படும்.
தேர்தல்பாதுகாப்புபணியில் சிறப்பு காவல் படையினர், அதிதீவிர அதிரடிப்படையினர், கமாண்டோ படையினர், பெண் போலீசார் உள்பட 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினரும் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் தவிர ரெயில்வே பாதுகாப்பு படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.