நெல்லை, குமரியில் மாயாவதி பிரச்சாரம்
நெல்லை: நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அக்கட்சி தலைவர் மாயாவதி, நெல்லை மற்றும் குமரிக்கு வரவிருப்பதாக அக்கட்சியின் தமிழக முதன்மை பொது செயலாளர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகம்-பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. சமத்துவ மக்கள் கட்சி உள்பட பல சிறிய கட்சிகளிடம் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால் கூட்டணி சேரும் அனைத்து கட்சிகளும் பகுஜன் சாமஜ் கட்சியின் யானை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் முதன் முறையாக 12 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நான் குமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். ஜீவன்குமார் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். குமரி தொகுதி ஒரு தேசிய தொகுதி. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளே இதுவரை ஜெயித்துள்ளன.
எனவே தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக நான் குமரியில் போட்டியிடுகிறேன். எனது கணவரின் சொந்த ஊர் குமரி மாவட்டம். நான் குமரி மாவட்டத்திலேயே தங்கி மக்கள் பிரச்சனைகளை தீர்த்தி வைப்பேன். தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி பாடுபடும்.
பனை தொழிலாளர்கள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன். பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் தேர்தல் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு 3வது அணி ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி துணை நிற்கும். கட்சி தலைவர் மாயாவதி நெல்லை மற்றும் குமரியில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என்றார்.