சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம்
சேலம்: சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் திடீரென அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தவர் எஸ்.கே. செல்வம். அவரை இந்த பொறுப்பிலிருந்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென நீக்கியுள்ளார்.
மேலும், இந்த பொறுப்பையும் சேர்த்து சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மஞ்சினி ஏ.கே. முருகேசன் கவனித்து கொள்வார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.கே. செல்வம் அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் முடியும் வரை சேலம்புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் மஞ்சினி ஏ.கே. முருகேசன், சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார் என்றார்.
அதிமுகவில் பொறுப்பாளர் மாற்றம் அடிக்கடி நிகழ்ந்து வருவதால் ஒரு தரப்பினர் மகிழ்ச்சியும், மற்றொரு தரப்பினர் வேதனையும் அடைந்து வருவவதாக அக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.