பினாமி வேட்பாளர்கள்..சாவ்லா கடும் எச்சரிக்கை
சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது சுயேச்சைகள் என்ற பெயரில் முக்கிய வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும் பினாமி வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் பணி குறித்து ஆய்வு செய்வதற்காக சாவ்லா நேற்று சென்னை வந்தார்.
இன்று காலை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் ஆய்வுக் கூட்டத்தை அவர் நடத்தினார். இக்கூட்டத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு வழங்கப்பட வேண்டும்? தற்போதுள்ள வாக்குச்சாவடிகள், தொகுதி சீரமைப்பிற்கு பிறகு அமைக்கப்பட வேண்டிய வாக்குச் சாவடிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பதட்டமான பகுதிகள் எவை? பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்வது அரசியல் கட்சிகள் கருத்துக்களை எவ்வாறு கேட்டறிந்து எந்த தேதியில் இந்த கூட்டத்தை நடத்துவது என்றும் ஆலோசனை நடந்தது.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் சாவ்லா கேட்டறிந்தார்.
திருப்தி அளிக்கும் தமிழகம்..
பின்னர் சாவ்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். தமிழ்நாட்டில் 97 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது அதிகம். இது திருப்தி அளிப்பதாக உள்ளது.
தேர்தல் விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஓட்டு போட வருபவர்கள் என்ன அடையாள அட்டை வைத்து இருந்தார்கள் என்பது கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யாத தேர்தல் அதிகாரிகள் கடமை தவறியதாக கருதப்படுவார்கள். பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் பொது சுவர்களில் யாரும் தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது. ஏற்கனவே விளம்பரம் செய்து இருந்தாலும் அதை அழிக்க நடவடிக்கை எடுககப்பட்டுள்ளது.
பினாமி வேட்பாளர்கள்..
சில மாதங்களுக்கு முன்பு நடந்த 6 மாநில தேர்தல்களில் பினாமி வேட்பாளர்கள் இருப்பது எங்களுக்குத் தெரிய வந்தது.
சில சுயேச்சை வேட்பாளர்கள் அரசு அனுமதிக்கும் 3 வாகனங்கள் உள்ளிட்ட சலுகைகளைப் பெற்றுக் கொண்டு, வேறு ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டது தெரிய வந்தது.
வேட்பாளராக போட்டியிட்டால் 3 வாகனங்களை பயன்படுத்தலாம். போலீஸ் பாதுகாப்பு போன்ற பல்வேறு சலுகை கிடைக்கும். இந்த சலுகைகளை பெற்றுக் கொண்டு வேறு வேட்பாளருக்காக பிரசாரம் செய்கிறார்கள்.
இது போன்று யாராவது போட்டியிடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பினாமி வேட்பாளர்கள் செய்யும் செலவுகளை, அவர்கள் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ அந்த வேட்பாளரின் கணக்கில் சேர்த்து விடுவோம்.
தேர்தல் விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அனைத்து மாநில தலைமை செயலாளர் களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
சிறிது தவறு கூட நடந்து விடக்கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. அரசு திட்டம் எதுவாக இருந்தாலும் அதிலும் தேர்தல் விதிமுறைகள் மீறக்கூடாது என்றார் சாவ்லா.