பங்குச் சந்தை: சென்செக்ஸில் 445 புள்ளிகள் உயர்வு!
மும்பை: அமெரிக்கா மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகளில் நிலவிய சாதகமான போக்கு இன்று இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் நேற்றைய விறுவிறுப்பு இன்றும் தொடர்ந்தது சந்தையில்.
இன்று ஒரே நாளில் மட்டும் சென்செக்ஸில் 445 புள்ளிகள் உயர்ந்தன. நிப்டியில் 108 புள்ளிகள் அதிகரித்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து பிற்பகல் 2 மணி வரை காளைப் பாய்ச்சல்தான். எடுத்த எடுப்பில் 245 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் பிற்பகலுக்குப் பின் மேலும் உயர்ந்தது.
வங்கித் துறை மற்றும் பெட்ரோலியத் துறைப் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின. நிப்டியில் 68 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் முறையே 6.31 சதவிகிதம் மற்றும் 2.26 சதவிகிதம் அதிக விலைக்கு கைமாறின. எச்டிஎப்சி பங்குகள் 2.80 சதவிகிதம் கூடுதல் விலைக்குப் போயின.
டிஎல்எப், ஸ்டெர்லைட், டாடா பவர்ஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 7 சதவிதத்திலிருந்து 11 சதவிகிதம் வரை அதிக லாபத்தில் விற்கப்பட்டன.
பிபிசில், என்டிபிசி, கெய்ல் பங்குகள் சொற்ப நஷ்டத்தைச் சந்தித்தன.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 339 புள்ளிகள் உயர்ந்து 8683 ஆகவும், நிப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 2702 ஆகவும் இருந்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 8789.43 (445.68), நிப்டி 2725.45 (108.00) என பங்குச் சந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைவாக முடிவடைந்தது.