லோக்சபா தேர்தல் - 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள்
மக்களவை தேர்தலுக்கு தேவையான அழியாத மை கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மைசூர் பெயின்ட் அண்ட் வார்னிஸ் என்ற அரசு நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்ல கனடா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, கம்போடியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
வழக்கமாக 5 மில்லி அளவு கொண்ட பாட்டில்களை தயாரித்து வந்த இந்நிறுவனம் இந்த முறை 7.5 செமீ., உயரம் கொண்ட 10 மில்லி பாட்டில்களை நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாரித்து வருகிறது. ஒவ்வொரு பாட்டில் மூலம் கிட்டத்தட்ட 700 வாக்காளர்களுக்கு மையிட முடியும்.
புள்ளிக்குப் பதில் கோடு!
இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் ஊதா மையால் கையில் சிறு புள்ளியிட்டு அடையாளம் வைப்பார்கள். ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் விரலின் மேல் பகுதியில் இருந்து நகத்தின் அடிபகுதி வரை நீண்ட கோடு இழுக்க உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவை இம்முறை சில மாநில தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டாலும், மக்களவை தேர்தலில் பயன்படுத்துவது இதுவே முதல்முறை இதனால் வழக்கத்தை விட கூடுதல் மை செலவாகும் என தெரிகிறது.
அதிகபட்சமாக உ.பிக்கு 2 லட்சத்து 86 ஆயிரம் பாட்டில்களும், குறைந்தபட்சமாக லட்சத்தீவுக்கு 120 பாட்டில்களும் தேவைப்படுகின்றன.
தமிழ்நாட்டுக்கு சுமார் 96 ஆயிரம் பாட்டில்கள் தேவைப்படும். மொத்தமாக நாடு முழுவதும் 20 லட்சம் பாட்டில்கள் தேவைப்படுகின்றன.
இதுவரை 7 லட்சம் பாட்டில் மை 16 மாநிலங்களுக்கு ஏற்கனவே சப்ளை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 லட்சம் பாட்டில்களையும் ஏப்ரலுக்குள் சப்ளை செய்யப்படும்.
இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் கூறுகையில், இந்த மை தயாரிர்க்க சாயங்கள், வாசனை பொருட்கள், சில்வர் நைட்ரேட், மை மற்றும் சிவ ரசாயனப் பொருட்களை பயன்படுத்துகிறோம். இந்த பாட்டீல்கள் அனைத்து பேக் செய்யப்பட்டு பத்திரமாக கொண்டு சேர்க்கப்படும். தொலை தூர நகரங்களுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.