தமிழ்நாடு முழுவதும் 9000 போலீசுக்கு பதவி உயர்வு
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் 9,000 போலீசாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டாக ஆயிரக்கணக்கான போலீசார் பதவி உயர்வுக்கு உரிய தகுதியை அடைந்த நிலையில், பதவி உயர்வு கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் கருணாநிதி, அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டார்.
அவர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணை அளிக்கப்பட்டு அவர்கள் பதவி ஏற்றுகொண்டுள்ளதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக தமிழக காவல்துறையில் பணிபுரிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஏட்டுகளாக வேலை பார்த்த 2,770 பேர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவியேற்று கொண்டனர். சென்னையில் மட்டும் 435 ஏட்டுகள் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
முதல் நிலை கவாலர்களாக இருந்த 6,260 பேர் நேற்று ஏட்டுகளாக பொறுப்பேற்றனர். மொத்த்தில் 9, 030 போலீசாருக்கு பதவி உயர்வு கிடைத்து, புதிய பொறுப்பில் இணைந்துள்ளனர்.