பிளஸ் 2 வேதியியல் தேர்வில் குளறுபடி- மாணவர்கள் சோகம்
சென்னை: நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 6 மதிப்பெண்களுக்கு தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மருத்துவ மற்றும் என்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இப்பாடம் முக்கியமானது என்பதால் மாணவர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு சுமார் 7 லட்சம் மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர். நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை தென்படவில்லை.
தேர்வின் முதல் பகுதி எளிதாக இருந்தது, என்றும் இரண்டாவது பகுதி மிகவும் கடினமாக இருந்ததும் என்று கூறினர்.
வினாத்தாளில் இருந்த 34ம் கேள்வி பாடத்திட்டத்தில் இல்லையென்றும், அதே போல் 38ம் கேள்விக்கு படம் வரையச் சொல்லி கேட்கப்பட்டது. இவ்வழக்கம் வேதியியல் தேர்வுக்கு புதிது எனவும் குறை சொல்லப்பட்டது.
இந்த இரு கேள்விகளும் தலா மூன்று மதிப்பெண் கொண்டவை. இவை இரண்டிலும் ஏற்பட்ட குளறுபடி காரணமாக வேதியியலில் 200 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என லட்சியத்துடன் படித்த மாணவர்கள் தற்போது படபடப்பில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், தமிழக அரசு இந்த இரு கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் அளிக்க உடனடியாக உத்தரவிட வேண்டும். அப்போது தான் மாணவர்களால் அடுத்து வரும் தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராக முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.