தொடர் கொலைகள்-பீதியில் நெல்லை!
நெல்லை: அடுத்தடுத்து கொலைகள், யார் எங்கே எப்போது மோதுவார்கள், யார் யாரைக் கொல்வார்கள் என்று தெரியாமல் குழம்பும் மக்கள், மீண்டும் கொலை மாவட்டமாக மாறி வருகிறது நெல்லை. மக்களோ பீதியில் உறைந்து கிடக்கின்றனர்.
ஜனவரியில் ...
காளக்காட்டில் மைக்கேல் ராஜ், தென்காசியில் முத்துகிருஷ்ணன், சுத்தமல்லியில் ரவுடி மதன், எஸ்.அய்யப்பன், என். அய்யப்பன், மானுரில் மாதர்.
பிப்ரவரியில்...
புளியங்குடியில் வெள்ளைய்யம்மாள், காளக்காட்டில் அருளானந்தம், பாளையில் ராஜன், நெல்லையில் தங்கமணி, நாங்குநேரியில் 5வயது சிறுமி, நம்பிசெல்வம், பாளையில் ராஜா.
மார்ச்சில்...
சங்கரன்கோவில் அருகே பாண்டியம்மாள், சின்னத்துரை, மணிக்கண்டன், குணசேகரன், முத்துபாண்டி, நாங்குநேரியில் செல்லப்பாண்டி, செந்தட்டியில் ஈஸ்வரன், பரமசிவன் ..
இதுதான் கடந்த மூன்று மாதத்தில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த கொலைகளின் டயரிக் குறிப்பு.
அன்று ஜாதி - இன்று எல்லாம்...
ஜாதிரீதியலான மோதல்களில் நடக்கும் கொலை சம்பவங்கள் ஒரு காலத்தில் நெல்லை மாவட்டத்தின் வேதனையான நிகழ்வுகளாக இருந்தன. ஜாதிமோதல்கள் ஒரளவுக்கு கட்டுபடுத்தப்பட்ட சூழ்நிலையில் சிறிய பிரச்சனைகளுக்காக கூட ஆளுக்கு ஆள் அரிவாளை தூக்கி மோதலுக்கு இறங்கி கொலையில் முடியும் சம்பவங்கள் தற்போது நெல்லை மாவட்டத்தின் தலைவலியாக மாறி வருகின்றன.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கேட்டால் நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலைகள் நடப்பது புதிதல்ல. தற்போது எதற்கெடுத்தாலும கொலை நடக்கிறது. குடிபோதை, அறியாமை, ஆத்திரம் காரணமாக கொலைகள் நடக்கின்றன.
சாதாரண பிரச்சனயை தன்மான பிரச்சனையாக கருதி எதிர் நடவடிகைகளில் இறங்குவதால் கொலைகள் அதிகரிக்கின்றன. சில கொலைகளுக்கு பல ஆண்டுகள் கூட கழித்து பழிக்குப் பழியாக கொலைகள் நடக்க வாய்ப்புள்ளதால் நிலைமை மோசம்.
கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகின்றனர். கொலையாளிகளிடம் தகுந்த விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுவரை 25 பேர் கொலை..
நெல்லை மாவட்டங்களில் கடந்த மாதங்களில் 25 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இச்சம்வங்கள் மேலும் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அரசிடமும், காவல்துறையிடமும் அதிகபட்சம் எதிர்பார்ப்பது நிம்மதியான வாழ்க்கை சூழல்தான். அதுக்கே ஆப்பு என்றால் மக்கள் என்னதான் பண்ணுவார்கள். காவல்துறை சற்று கடுமையான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியம்.