மக்களவை தேர்தல்: 2 தொகுதிகளில் போட்டி- ஏசி சண்முகம்
சென்னை: முதலியார், வேளாளர் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்காததை அடுத்து வரும் மக்களவை தேர்தலில் தங்கள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் என புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதிய நீதி கட்சி சமீபத்தில் முதலியார், வேளாளர் சமுதாயத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தது.
இல்லையென்றால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தது. இந்நிலையில் எந்த இட ஒதுக்கீடும் அறிவிக்கப்படாததை அடுத்து அக்கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிடும் என கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏசி சண்முகம் கூறுகையில்,
மக்களவை தேர்தலில் புதிய நீதிக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும். வரும் 15ம் தேதி மாலை 6 மணிக்கு கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அதில் எந்த கூட்டணியில் சேருவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, அரக்கோணம் ஆகிய 4 தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு அதிக வாக்காளர்கள் உள்ளனர்.
எனவே இவற்றில் 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமென்றால் இலங்கையில் ஈழத்தமிழர்கள் அழிவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இது தொடர்பாக சோனியா காந்திக்கும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஐ.நா. பாதுகாப்புப்படையும் இலங்கைக்கு செல்லவேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பாதிக்கும் என்றார் ஏசி சண்முகம்.
மகனுக்கு 15ம் தேதி கல்யாணம்
இதற்கிடையே, டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக இணைவேந்தராக இருக்கும் ஏசி சண்முகத்தின் மகன் ஏசிஎஸ் அருண்குமாரின் திருமணம் வரும் 15ம் தேதி சென்னையில் உள்ள ஏசிஎஸ் மருத்தவ கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.