போலி விசா-சரவண பவன் ஊழியர் கைது: 'அண்ணாச்சி' மகனுக்கு வலைவீச்சு
சென்னை: போலி விசாவுடன் அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருந்த ஹோட்டல் சரவண பவன் ஊழியர் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவக்குமார் தலைமறைவாகி விட்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடக்கம் பட்டி, வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன். இவரை சரவண பவன் நிறுவனத்தினர் போலி விசா மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளனர்.
அதன்படி மார்ச் 8ம் தேதி கோகுலகண்ணன், அமெரிக்காவுக்குக் கிளம்பினார். ஹாங்காங் விமான நிலையத்தில் இறங்கி இன்னொரு விமானத்தைப் பிடித்து அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஹாங்காங்கில் அவர் இறங்கியவுடன் அவரது ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்திருந்தது போலி விசா எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 2 நாட்கள் அங்கு வைத்திருந்து கண்ணனை அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவரை சென்னைக்கு நாடு கடத்தினர். வியாழக்கிழமை காலை ஆறே முக்கால் மணிக்கு அவர் சென்னை வந்து சேர்ந்தார். வந்ததும் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
இதையடுத்து கண்ணனிடம் நடந்த விசாரணையின்போது சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவக்குமாருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிவக்குமாரை போலீஸார் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். இதனால் சிவக்குமார் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுதான் சிக்கினார்...
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் சிவக்குமார், நான்கு சரவண பவன் ஊழியர்களுக்காக போலி விசாக்கள் பெற முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் பெரும் சிக்கலில் சிவக்குமார் மாட்டியுள்ளார்.