சத்யம் பங்குகளை வாங்க ஐகேட் மீண்டும் விருப்பம்
நிறுவனர் ராமலிங்க ராஜுவின் மோசடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இருண்ட எதிர்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சத்யம் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கைப்பற்றும் முயற்சியில் உலகப் புகழ்பெற்ற பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
ஏற்கெனவே எல் அண்டு டி, ஸ்பைஸ் குழுமம், டெக் மஹிந்திரா போன்ற இந்த முயற்சியில் தீவிரமாக இருப்பதை வெளியிட்டிருந்தோம்.
இப்போது சத்யம் பங்குகளை வாங்க மீண்டும் ஐகேட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சத்யம் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையைப் பார்த்த பிறகு, அதை வாங்கும் போட்டியில் இறங்கப் போவதாக செய்திருப்பதாக ஐகேட் தெரிவித்துள்ளது.
ஐபிஎம், கேகேஆர் மற்றும் பிடெல்டி:
சத்யம் பங்குகளை வாங்குவதில் மேலும் 3 நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன. ஐடி நிறுவன ஜாம்பவான் நிறுவனமான ஐபிஎம், கேகேஆர் மற்றும் பிடெல்டி நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. இவை தவிர்த்து மேலும் 130 நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தை வாங்க விண்ணப்பித்துள்ளன. இவை அனைத்திடமிருந்துமே, இறுதி விருப்ப அறிக்கை கேட்டுள்ளது சத்யம் இயக்குநர் குழு.