4வது அணியை உருவாக்க முயற்சி - கூறுகிறார் சிரஞ்சீவி
மெகா ஸ்டார் சிரஞ்சீவி அரசியல் புயலாக மாறி சுமார் 8 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 16 மற்றும் 23ம் தேதி இரண்டு கட்டமாக நடக்கும் 294 தொகுதிகள் கொண்ட சட்டசபை மற்றும் 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஆட்சியமைக்க தேவையான இடங்களை எங்கள் கட்சி நிச்சயம் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆந்திராவில் தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசியல்வாதிகள் மக்களிடம் ஓட்டை வாங்கிவிட்டு பின்னர் அவர்களை ஏமாற்றி விடுகின்றனர்.
நான் என்னை என்டிஆருடன் ஒப்பிட விரும்பவில்லை. அவரை போல் ஏழை மக்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவருக்கு பதிலாக நான் வந்திருப்பதாகவும், என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என ஆந்திர மக்கள் நினைக்கின்றனர். அதை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பசி கொடுமை ஆட்டிப்படைக்கும் ஆந்திராவில் ரூ 100க்கு ரேஷன் பொருட்களை வழங்க முயற்சி செய்வோம்.
தற்போதைய ஆந்திர காங்கிரஸ் அரசின் திட்டங்கள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், அவர்கள் அதிக ஊழல் செய்து, திட்டங்கள் மக்களை சென்றடையவிடாமல் தடுத்து விடுகின்றனர். எங்கள் கட்சி மாநில அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
நான்காவது அணி...
தேசிய அளவில் ஆலோசனை செய்து வருகிறோம். நான்காவது அணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றன. சரத் பவார் கட்சி தங்கள் கட்சி சின்னத்தை எங்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இருந்தாலும் எங்களிடம் வேறு சில திட்டங்களும் இருக்கிறது என்றார் சிரஞ்சீவி.