For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரியான முகவரி இல்லாததால் 59 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: நரேஷ்குப்தா

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சரியான முகவரி தராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் வாக்காளர் பட்டியலிலிருந்து 59 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நரேஷ்குப்தா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சத்தியகோபால், புதன்கிழமை பொறுப்பேற்க உள்ளார். அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

தற்போது அங்குள்ள அவர், கிழக்கு கோதாவரி மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசிப்பார். ஆந்திரத்தில் உள்ளது போல, இங்கும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

ஆந்திரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் சிறந்த முறையில் அமல்படுத்தப்படுவதாக மத்திய தேர்தல் ஆணையம் கருத்துத் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் அது போன்று விதிகளை கடுமையான முறையில் அமல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.

2004-ம் ஆண்டை ஒப்பிடுகையில், தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்குக் காரணம், 100 சதவீதம் சரிபார்ப்புப் பணியை மேற்கொண்டதாகும்.

2004-ம் ஆண்டு 4.72 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். தற்போது 4.13 கோடி பேர் வாக்காளர்களே உள்ளனர். சரியான முகவரி உள்ளிட்டவை இல்லாத காரணத்தால் 59 லட்சம் பேர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 அல்லது 3 நாள்களில் அந்தப் பணியை முடிக்க தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலும், டிஐஜி, ஐஜி சரக அளவிலும், அதன்பின்பு, டிஜிபி அலுவலகம் வரையிலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற வேண்டும்.

மதுரையில் மாற்றல் உத்தரவு போடப்பட்ட பிறகும், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்லவில்லை என புகார் எழுந்துள்ளது. மாறுதல் கொடுக்கப்பட்ட இடங்களுக்கு, ஓரிரு நாளில் அவர்கள் செல்ல வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்தார். அதில், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபிறகு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் வாக்களிக்க ரூ.5 ஆயிரம் அளிக்கப்படுவதாக கூறப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் வரவில்லை.

தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து யார், எந்தக் கட்சி புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர் என் மீது கூறியுள்ள புகார்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. தேர்தலை அமைதியாக, சிறப்பாக நடத்தி முடிப்பதில்தான் நான் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன் என்றார் நரேஷ்குப்தா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X