ஏர்செல்: ரூ.25,000 கோடி புதிய முதலீடு!
பிரபல செல்போன் நிறுவனமான ஏர்செல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 25 ஆயிரம் கோடியை விரிவாக்கத் திட்டத்துக்காக முதலீடு செய்ய உள்ளது.
ஹைதராபாதில் ஏர்செல்லின் ஜிஎஸ்எம் மொபைல் சேவையைத் தொடங்கிவைத்த அதன் தலைவர் குல்தீப் சிங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஏர்செல் நிறுவனம் நடப்பு ஆண்டில் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை 1.7 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
டெல்லி, உத்தரப் பிரதேசம், மும்பை ஆகிய பகுதிகளுக்கும் விரைவில் ஏர்செல் ஜிஎஸ்எம் சேவை விரிவுபடுத்தப்படும். இம்மாத இறுதிக்குள் அந்தப் பணிகள் முடிந்துவிடும்.
வரும் ஏப்ரல் மாதத்துக்குள் ஏர்செல் செயல்பாடு வட்டாரங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்த்தப்படும். 13-வது நகரமாக ஹைதராபாதில் தற்போது ஜிஎஸ்எம் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் மட்டும் ஏர்செல் நிறுவனம் ரூ. 1,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் ரூ. 500 கோடியும், அடுத்து டிசம்பருக்குள் ரூ. 500 கோடியும் முதலீடு செய்யப்படும் என்றார் குல்தீப் சிங்.