மீண்டும் பொள்ளாச்சியை கேட்கும் மதிமுக
பொள்ளாச்சி: வரும் மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் மதிமுக மீண்டும் போட்டியிட வேண்டும் என்று அக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் அக் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. அதில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக லோக்சபா தேர்தலுக்கு பொள்ளாச்சி தொகுதியை கேட்டுப் பெற வேண்டும்.
இத்தொகுதியில் மதிமுக இரு முறை போட்டியிட்டுள்ளது. இதனால், நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மதிமுகவுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.
எனவே இம்முறையும் பொள்ளாச்சி தெகுதியில் மதிமுகவே போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அனுமதியுடனேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது.
கட்சியைவிட்டு மு.கண்ணப்பன் விலகிய நிலையில் அவரது தொகுதியான பொள்ளாச்சியில் தனது பலத்தை நிரூபிக்க மதிமுக தீவிரமாக உள்ளது. இத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் கண்ணப்பனே போட்டியிடலாம் என மதிமுக கருதுகிறது.