பாமகவுடன் குலாம் நபி பேச்சு-தங்கபாலு தகவல்
சென்னை: பாமகவுடனான நல்லுறவை காங்கிரஸ் நீடிக்க விரும்புகிறது. கூட்டணி குறித்து அக்கட்சியுடன் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
பாமகவுடன் கூட்டணி குறித்து திமுக சார்பில் பேசவில்லை என முதல்வர் கருணாநிதி அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு,
நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தமட்டில், காங்கிரஸ் மற்றும் திமுகவினரிடையே சுமுகமான உறவு உள்ளது. பாமகவுடன் காங்கிரஸ் கட்சி நல்லுறவை நீடிக்க விரும்புவதால், கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், அந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்களைச் சேகரித்து வருகின்றனர். இவற்றை செஞ்சிலுவைச் சங்கம் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.
இலங்கையில் அமைதியை நிலைநாட்ட, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் உலக நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களுடன் பேசி வருகின்றனர்.
இலங்கைக்கு மத்திய அரசு 25 டன் மருந்துகளை அனுப்பியதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் பல இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்து, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்து வருகிறது.
சிறுத்தைகள்-சோனியா முடிவு செய்வார்...
மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான கூட்டணி குறித்து சோனியா காந்தி தான் முடிவு செய்வார் என்றார் தங்கபாலு.