வாழ்வுரிமை வேண்டி நரிக்குறவர்கள் உண்ணாவிரதம்
விழுப்புரம்: வேட்டையாடுவதை கைவிட்ட நரிக்குறவர்களின் குடும்பங்களை காக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழுப்புரத்தில் நரிக்குறவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வனவிலங்குகள், பறவைகள் ஆகியவற்றை வேட்டையாட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதை மீறி வேட்டையாடும் நரிக்குறவர்களின் துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்கின்றனர்.
துப்பாக்கி இல்லாதநிலையில் நரிக்குறவர்களால் வேட்டைக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து தங்களது குடும்பங்களை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கு வேண்டும் என கோரிக்கை வைத்து அவர்கள் கடந்த 14ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இவர்களது உண்ணாவிரத போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒருங்கிணைத்து, ஏற்பாடுகளை செய்தது. அதன் விழுப்புரம் வட்டத் தலைவர் வைகுந்தவாசன் தலைமை தாங்கினார். சிபிஎம் எம்எல்ஏ மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நரிக்குறவ இன மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், மனைப்பட்டா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
வனத்துறையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவ ஆண், பெண் அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், பறிக்கப்பட்ட துப்பாக்கி, மற்றும் துப்பாக்கி லைசென்ஸ் உடனடியாக வழங்கப்பட வேண்டும், வேட்டைத் தொழிலை கைவிட்ட நரிக்குறவர் குடும்பங்களுக்கு சிறு தொழில் கடனாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.