பெங்களூர் தமிழ் ஜோதிடர் மனைவியுடன் கைது
பெங்களூர்: அமெரிக்கா சென்று ஜோதிடம் பார்க்கும் ஆசையில் போலி ஆவணங்கள் கொடுத்து விசா வாங்க முயற்சித்த பெங்களூரைச் சேர்ந்த தமிழ் ஜோதிடர் மற்றும் அவரது மனைவியை சென்னை ராயபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெங்களூர் எலகண்டாவை சேர்ந்தவர் நாகேந்திரன்(36). ஜோதிடராக பணியாற்றி வந்த இவர் அமெரிக்கா சென்று ஜோதிட தொழிலில் ஈடுபட நினைத்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் தனக்கும், தனது மனைவி சுகுணா (26) என்பவருக்கும் சுற்றுலா விசா வழங்க வேண்டுமா என கோரி விண்ணப்பம் செய்தார்.
இந்நிலையில் அவர்கள் நேற்று துணை தூதரகத்துக்கு நேரடி விசாரணைக்கு வந்தனர். அப்போது அவர் கொடுத்த பான் கார்டு மற்றும் வருமான வரி சான்றிதழ்கள் பொய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தூதரக அதிகாரிகள் சென்னை ராயபேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் சைலேத்திராஜ் ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் நாகேந்திரா கூறுகையில், போலி ஆவணங்களை தாக்கல் செய்தால் உடனடியாக விசா பெற்றுவிடலாம் என புரோக்கர் ஒருவர் கூறியதை அடுத்து இவ்வாறு செய்தேன். அடுத்தவர் பேச்சை நம்பி மோசம் போய்விட்டேன் என்றார் நாகேந்திரா.
இதேபோல தகவல் தொழில்நுட்ப என்ஜினியராக வேலை பார்ப்பதாக போலி ஆவணம் கொடுத்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது கலீல் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று மட்டும் அமெரிக்க துணை தூதரகத்தில் போலி ஆவணம் கொடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.