மங்களூரில் நுழைய ஸ்ரீராம் சேனா தலைவருக்கு 1 ஆண்டு தடை
மங்களூரில் கடந்த ஜனவரி 24ம் தேதி ஒரு பப்பில் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடிய பெண்கள் மீது ஸ்ரீராம் சேனை அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் பல பெண்கள் படுகாயமடைந்தனர். இதற்கு பல மகளிர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் முத்தாலிக் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து காதலர் தினத்தை யாரும் கொண்டாடக் கூடாது என்று தடை போட்டார் முத்தாலிக். யாராவது ஜோடியாக சுற்றினால் அவர்களைத் தாக்குவோம், அங்கேயே திருமணம் செய்து வைப்போம் என மிரட்டினார்.
ஆனால், முத்தாலிக் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரைக் காப்பாற்றும் வேலையில் கர்நாடக பாஜக அரசு இறங்கியது. உள்துறை அமைச்சர் ஆச்சாரியாவும் முத்தாலிக் சொல்வதில் தவறில்லை என்று பேசி தனது ராம்சேனா ஆதரவை வெளிப்படுத்தினார்.
ஆனால், பாஜகவின் இந்த முத்தாலிக் ஆதரவு நிலைக்கு மாநிலம் முழுவதுமே எதிர்ப்பு எழுந்துள்ளது. படித்தவர்கள், நடுத்தர மக்களிடையே பாஜக மீது கோபம் எழுந்துள்ளதாக தகவல் வரவே மக்களவைத் தேர்தல் நேரத்தில் இது நல்லதல்ல என்பதை உணர்ந்த அரசு முத்தாலிக் மீது திடீர் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இத்தனைக்கும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்தாலிக் மங்களூர் மாவட்டத்தில் அமைதி குலைக்க முயற்சிப்பதாகக் கூறி, அவரை மங்களூர் மாவட்டத்துக்குள் நுழைய 1 ஆண்டு தடை விதித்தார் மாவட்ட ஆட்சியர் பொன்னுராஜ்.
தேர்தல் முடிந்தபின் முத்தாலிக் மீது அரசு மீண்டும் பரிவு காட்டும் எனத் தெரிகிறது.