பீகாரில் காங்.குக்கு 3 சீட்தான்-லாலு கட்சிக்கு 25, பாஸ்வானுக்கு 12
டெல்லி: பீகார் மாநிலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 3 சீட்களை மட்டுமே லாலு பிரசாத் யாதவ் ஒதுக்கியுள்ளார்.
பீகார் மாநில ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இழுபறியாக இருந்து வந்தது. பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி கூடுதல் சீட்களைக் கேட்டு வந்ததே இதற்குக் காரணம்.
இந்த நிலையில் இன்று தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்தது. இதை ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பாஸ்வானும் இன்று டெல்லியில் கூட்டாக அறிவித்தனர்.
அதன்படி, லாலு பிரசாத்தின் கட்சி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 25 இடங்களில் போட்டியிடும். பாஸ்வான் கட்சிக்கு 12 சீட்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு 3 சீட் மட்டுமே கிடைத்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டது. லாலு கட்சி 26 சீட்களிலும், லோக் ஜனசக்தி 8 சீட்களிலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை லாலு கட்சி ஒரு தொகுதி குறைவாகவும், காங்கிரஸ் ஒரு தொகுதி குறைவாகவும் போட்டியிடுகின்றன. ஆனால் பாஸ்வானுக்கு கூடுதலாக நான்கு சீட்கள் கிடைத்துள்ளன.