அதிமுக கூட்டணிக்கும் தேமுதிக தயார்!
மக்களுடன் தான் கூட்டணி என்று வசனம் பேசி வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த்தின் நிலையை மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் கூட்டணி வைத்தால் தான் ஒரு இடத்திலாவது வெல்ல முடியும் என்ற நிதர்சனத்தை அவரது கட்சியினர் தெளிவாக்கிவிட்டதால் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிக்கவும் அவர் தயாராகிவிட்டார்.
இதையடுத்து தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் மூலமாக திமுக முயன்று வருகிறது. அதே நேரத்தில் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்துடன் அதிமுகவும் மறைமுகமாகப் பேசி வருகிறது.
அதிமுக 8 தொகுதிகள் வரை தரத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் சொல்லும் அளவுக்கு நாங்களும் திமுகவிடம் சீட் வாங்கித் தருகிறோம் என்று காங்கிரசும் கூறி வருகிறது.
இந் நிலையில் விஜய்காந்தை டெல்லிக்கு அழைத்துள்ளது காங்கிரஸ். ஆனால், அவர் பண்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பி வைப்பார் என்று தெரிகிறது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ராமச்சந்திரன்,
திமுக அல்லது அதிமுக அணியில் இணைந்து போட்டியிடுவதா, அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒருசில நாட்களில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
திமுக தலைவர்கள் யாரும் உங்கள் தரப்பில் பேசினார்களா என்று கேட்டதற்கு, காங்கிரஸ் நடத்திவரும் பேச்சுவார்த்தை திமுகவுக்கும் பொருந்தும்தானே.
திமுக-காங்கிரஸ் அணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இடம் பெற்றுள்ளதையும் கருத்தில் கொண்டுள்ளோம் என்றார்.
இதன்மூலம் அதிமுகவுடன் கூட கூட்டணி அமைக்க தேமுதிக தயார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் ராமச்சந்திரன். மேலும் கூட்டணி என்ற முடிவுக்கு வந்துவிட்டால் யார் அதிகமாக இடங்களைத் தருகிறார்களோ அவர்களுடன் தேமுதிக கைகோர்க்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையே தேமுதிகவுக்கு பாமகவுக்கு இணையாக 7 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.